மரணதண்டனைக் கைதியான பிரேமலால் ஜெயசேகரவின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிபோகின்றது எனவும், அவரது மரணதண்டனை உறுதிப்படுத்தப்படுகின்றது எனவும் சட்டமா அதிபரினால் நீதி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் சிறிலங்கா பொதுஜன முன்னணி சார்பாகப் போட்டியிட்ட பிரேமலால் ஜெயசேகர, மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார்.
2015ஆம் ஆண்டு அரசியல் கூட்டமொன்றில் இடம்பெற்ற கொலைச் சம்பவமொன்று தொடர்பாகவே இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
இவர் சிறையில் இருந்த நிலையிலேயே தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.
தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியபோதும், இன்னமும் நாடாளுமன்றத்தில் உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவில்லை.
இவ்வாறான நிலைமையில், பிரேமலால் ஜெயசேகரவை நாடாளுமன்றத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவித்திருந்தார்.
இது குறித்த அறிவிப்பை சிறைச்சாலைகள் ஆணையாளர் நீதி அமைச்சருக்கு அனுப்பியிருந்தார். நீதி அமைச்சர் அலி சப்ரி இது குறித்து சட்டமா அதிபரின் அனுமதியைக் கோர நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதற்கமைய இந்த விடயம் குறித்து நீதி அமைச்சருக்கு அறிவித்துள்ள சட்டமா அதிபர், மரணதண்டனைக் கைதியான பிரேமலால் ஜெயசேகரவினால் எம்.பியாகப் பதவியேற்க முடியாது என்று அறிவித்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை